அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்ற வைத்தியர் திலகநாதனுக்கு வழங்குமாறு செட்டிகுளம் கால்நடை ஒன்றியத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார் .
இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்,
கால்நடை வைத்தியரான செல்லத்தம்பி திலகநாதனை இம் முறை தேர்தலில் வன்னி மாவட்டத்தில் களம் இறக்கியிருந்தோம்.
அவர் 7200 விருப்பு வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். அந்த வகையில் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த ஆசனத்தை வன்னிப் பகுதிக்கு ஒதுக்கி, விருப்பு வாக்குகள் அதிகம் பெற்ற வைத்தியர் திலகநாதனுக்கு வழங்க வேண்டும்.
அவர் வன்னியில் கால்நடை தொடர்பான விடயங்களில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளார்.
அந்த வகையில் அவருக்கு நாம் எமது ஆதரவினை வழங்கி அதிகமான வாக்குகளை பெற்றுக் கொடுத்துள்ளோம். எனவே அந்த ஆசனம் வன்னிப் பகுதிக்கு வழங்க வேண்டும்.
இது தொடர்பான கோரிக்கையினை முன் வைப்பதற்காக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாமும், குறித்த வேட்பாளரும் அழைப்பினை மேற்கொண்டிருந்தோம்.
தொடர்சியாக பல தடவை முயற்சித்தும் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் ஊடகங்கள் வாயிலாக அதனை தெரியப் படுத்துகின்றோம் என்றார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 24 மணித்தியாலம் வருவதற்கு முன்னர் இவ்வாறு கதிரைக்காக அடிபடுபவர்களா மக்களுக்கு சேவை செய்ய முன்வருவார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.