13 வயதுடைய பாடசாலை மாணவியுடன் ஓட்டம் பிடித்த ஒரேஞ்ச் வியாபாரி..!

வயங்கொடை பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவியுடன் தப்பிச் சென்ற இளைஞனை வயங்கொடை காவல்துறையினர் கைது செய்து அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வயங்கொடை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் வயங்கொடை பிரதேசத்தில் வீதியோரத்தில் ஒரேஞ் பழங்களை விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.



பள்ளிக்கு செல்லும் போது சாலையோரம் ஒரேஞ் பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞரை மாணவி சந்தித்து பேசிக் கொண்டிருந்தார், பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

சந்தேக நபரும் சிறுமியும் தப்பிச் சென்ற பின்னர் 06 நாட்கள் பேருந்து நிலையங்களிலும், விற்பனை நிலையங்களிலும், மரத்தடியிலும் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



சிறுமியின் தாயார் வயங்கொடை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வயங்கொடை காவல் நிலைய தலைமைப் பரிசோதகர் அசங்கவின் அறிவுறுத்தலின் பேரில், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தின் பொறுப்பதிகாரி சகுனி, சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளார்.