Monday, March 2, 2026
Huis Blog

ஈரான் தலைநகரில் உள்ள காந்தி மருத்துவமனை மீது அமெரிக்க – இஸ்ரேல் படைகள் தாக்குதல்..!

0

ஈரானிய செய்தி நிறுவனமான ISNAவின் கூற்றுப்படி, வடக்கு தெஹ்ரானில் உள்ள காந்தி மருத்துவமனை அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

“தெஹ்ரானின் காந்தி மருத்துவமனை சியோனிச – அமெரிக்க வான் வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டது,” என்று அது கூறியது.

ஃபார்ஸ் மற்றும் மிசான் செய்தி நிறுவனங்கள், மனிதர்கள் அற்ற சக்கர நாற்காலிகளுக்கு இடையில் தரையில் குப்பைகள் இருப்பதைக் காட்டும் ஒரு வீடியோவை உள்ளே இருந்து வெளியிட்டுள்ளன.

‘இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது’ – பிரதமர் மோடி

0

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் சற்று முன்னர் பேசியதாகக் கூறியுள்ளார்.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது நடந்த தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

“இந்த கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது,” “பதற்றத்தைக் குறைத்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மையை நாங்கள் ஆதரிக்கிறோம். என்று மோடி கூறினார்.”

தெஹ்ரானில் மேலும் இரண்டு சக்திவாய்ந்த பாரிய குண்டு வெடிப்புகள்..!

0

ஈரானின் தலைநகரின் அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல்களை பலத்த குண்டு வெடிப்புகள் சற்று முன்னர் உலுக்கியுள்ளன. ஈரான் நேரப்படி இரவு 9 மணியளவில் (GMT 17:30) குண்டு வெடிப்புகள் வெடித்துள்ளன.

குறித்த சம்பவத்தை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இலக்கு மற்றும் பாதிப்பு என்ன என்பது தொடர்பில் இதுவரைத் தெரியவில்லை.

சற்று முன்னர் ஈரானால் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலிய இராணுவம் இடைமறிக்க முயற்சி..!

0

சற்று முன்னர் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை இராணுவம் அடையாளம் கண்டுள்ளதாகவும் அதன் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இடைமறிக்க செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

“சமீபத்திய நிமிடங்களில், உள்நாட்டு முன்னணி கட்டளை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு முன் எச்சரிக்கை அறிவுறுத்தல்களை நேரடியாக அனுப்பியுள்ளது என்று அது மேலும் கூறியுள்ளது.

“பொதுமக்கள் பொறுப்புடன் இருக்கவும் அறிவுறுத்தல்களின்  படி செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

ஈரானுக்கு விழுந்த மற்றுமொரு பேரிடி; முன்னாள் ஜனாதிபதியும் மகிந்தவின் நண்பரும் மரணம்..!

0

ஈரானின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ‘வியூக ஆலோசனைச் சபையின்’ உறுப்பினருமான மஹ்மூத் அஹ்மதிநெஜாத் அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது முன்னாள் தலைவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுருக்கமான செய்திக் குறிப்பில், அஹ்மதிநெஜாத் அவரது பல தோழர்களுடன் சேர்ந்து கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ ஈரானிய நிறுவனங்கள் உறுதிப்படுத்தின

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஈரானின் ஜனாதிபதியாகப்த மஹ்மூத் அஹ்மதி நெஜாட் பதவி வகித்தார்.

வடகிழக்கு தெஹ்ரானின் ‘நர்மக்’ (Narmak) பகுதியில் அமைந்துள்ள அஹ்மதி நெஜாட்டின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொக்குவில் இந்து கல்லூரி மாணவர் அனுமதியில் சுற்றுநிருப மீறல்..!

0

யாழ். கொக்குவில் இந்து கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களை மீறும் வகையில் மாணவர் அனுமதி இடம்பெற்றமை முதற்கட்ட விசாரணைகளில் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலையில் மாணவர் அனுமதி தொடர்பாக பெற்றோர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த பாடசாலை இடைநிலை மாணவர் ஒருவரின் பாடசாலை அனுமதி தொடர்பில் பெற்றோரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட போது இடைநிலை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் சுற்று நிருப்பங்களை மீறும் வகையில் பாடசாலை அதிபர் செயற்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் வலயக்கல்வி அலுவலகத்திடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னி ஆசிரிய இடமாற்ற பிரச்சினை தொடர்பில் கவனத்திற்கு கொண்டு சென்ற சத்தியலிங்கம் MP…!

0

வன்னி மாவட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரிய இடமாற்ற பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

கல்வி அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்கூட்டம் பிரதமரும், கல்வி அமைச்சருமாகிய ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (18.02.2026) பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே அவர் பிரதமரின் கவனத்திற்கு குறித்த விடயங்களை தெரியப்படுத்தினார். அவர் கூட்டத்தின்போது மேலும் தெரிவித்ததாவது,

எமது பிரதேசங்களில் இடமாற்றங்களின் போது, குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்களின்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிறந்த இடமாற்றக்கொள்கை ஒன்று இல்லாமையே இதற்கு காரணமாகும். ஏனைய திணைக்களங்களில் வருடாந்த இடமாற்றங்களின் போது நீண்டாகாலமாக சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச்செல்ல தகுதியானோர் மற்றும் வெற்றிடமாகவுள்ள எண்ணிக்கை ஆகிய இரண்டினையும் சேர்த்தே இடமாற்ற எண்ணிக்கை அறிவிக்கப்படும். எனினும் கல்வித்திணைக்களங்களின் கீழ் அவ்வாறு நடைபெறுவதில்லை.

வெற்றிடங்களின் எண்ணிக்கை மாத்திரமே இடமாற்ற என்ணிக்கையாக அறிவிக்கப்படுகின்றது. இதனால் நீண்டகாலம் சேவையாற்றி இடமாற்றம் பெற்று செல்லவேண்டிய உத்தியோகத்தர்கள் பாதிக்கப்படுவதுடன், இடமாற்ற பிரச்சினைகளால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆகையால் இடமாற்ற விடயங்களின் போது மேற்சொன்ன இரு விடயங்களும் பின்பற்றப்படவேண்டும். அவ்வாறு செய்தால் இடமாற்றங்களின்போது எதுவித பிரச்சினையும் ஏற்படாது. ஆகையால் அதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், இது ஒரு சிறந்த யோசனை எனவும், இயலுமானவரையில் இந்த வருடம் இந்த யோசனையினை நடைமுறைப்படுத்த முயல்வதாகவும், அல்லது அடுத்த வருடம் தொடக்கம் நடைமுறைப்படுத்தி ஆசிரிய இடமாற்றங்களில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் கல்வித்திணைக்களங்களின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு பூரணப்படுத்தப்படாதுள்ள கட்டடங்கள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கொண்டுவந்தார். ஆட்சிக்கு வரும் அரசுகள் கடந்த காலங்களில் மாகாணப்பாடசாலைகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடங்களை அமைத்தன. எனினும் அவற்றில் பல பூரணப்படுத்தப்படாதுள்ளது. இதுதொடர்பில் கவனம் எடுக்கவும்.

வவுனியாவில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கடந்தகால நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப கல்விக்கான ஆய்வுகூடம் 90 வீதமான வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட நிலையில் பாவிக்கமுடியாதுள்ளது.

எஞ்சிய 10 வீதமான வேலைகளை நிறைவுசெய்து கொடுக்கும்பட்சத்தில் மாணவர்கள் அதனை பயன்படுத்தி பயனடைவர். ஆகவே இவ்விடயத்தில் அதிக கரிசனை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு குறித்த வேலைத்திட்டங்களை நிறைவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் பதிலளித்திருந்தார்.

கிவுல்ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவுள்ள தமிழ் மக்களுக்கு எதுவுமில்லை – சத்தியலிங்கம் எம்.பி

0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்காக மொத்த மதிப்பீடாக 24000 மில்லியன் ரூபா காட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 6000 விவசாயிகள் பயன்பெறவுள்ளனர்.

ஒரு விவசாயிக்கு ரூபா 4 மில்லியன் செலவு செய்யும் அளவுக்கு அவசரம் காட்டும் பின்னணி பற்றி அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் எடுத்துரைத்தார்.

கிவுல்ஓயா திட்டம் தொடர்பிலான விசேட கூட்டமொன்று விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் இன்று (17.02.2026) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

1983ம் ஆண்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் அங்கு குடியேற்றப்பட்ட வரலாறும் அதனால் அந்த நிலத்திற்கு சொந்தமான தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் தொடர்சியாக இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் கடந்தகால பேரினவாத அரசாங்கங்களின் செயற்பாடு தொடர்பிலும் விரிவான தெளிவூட்டல் செய்யப்பட்டது.

மேலும் 1983ம் ஆண்டு தமிழ்மக்களை அவர்களது பூர்வீக நிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றிவிட்டு சிங்கள மக்களை அந்த நிலங்களில் குடியேற்றம் செய்யும்போது தமிழ் மக்கள் வாழ்ந்த கொக்கச்சியான்குளம்( போகஸ்வெவெ), கச்சல்சமளங்குளம் (சப்புமல்கஸ்கட), ஹெண்பாம் (கல்யானபுர), டொலர்பாம் (சம்பத்நுவர), சிலோன் தியேட்டர் (கஜபாபுர), அரியகுண்டான் (எத்தாவெட்டுனுவெவ), கொக்குத்தொடுவாய் வடக்கு ( ஜனகபுர), உந்தராயன்குளம் (நெலும்வெவெ), ஆமையன்குளம் (கிரிபென்வெவெ), வத்தாமடு(ஹெலம்பவெவ), கொக்குளாய் (கொகிலபுர) , நாயாறு (மாயபுர), திரிவைச்சகுளம் ( அந்தரவெவ), நவாலயம் மற்றும் சுவாலயம்( மொனரவெவ) ஆகிய சுமார் 14இற்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டதுடன் வெடிவைத்தகல்லு மற்றும் கள்ளிக்குளம் ஆகிய பாரம்பரிய தமிழ் கிராமங்களில் பல சிங்கள உப கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். அமைச்சர் அவர்கள் மிக ஆர்வமாக அவற்றை கேட்டறிந்து கொண்டார்.

1983ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து குடியேற்றப்பட்ட மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காகவே இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நீர்வழங்குவதில் எமக்கு எப்பிரச்சினையும் கிடையாது.

ஆனால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் தரப்பினராகிய தமிழ்மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கான நிவாரனங்கள் தொடர்பிலும் எந்தவிதமான ஆய்வுகளையும் செய்யாத மகாவலி அதிகாரசபை பயன்பெறும் தரப்பினருக்கான வரப்பிரசாதங்கள் பற்றியே திட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் விவசாயிகளின் 910 ஏக்கர் வயல் நிலம், பிரதேச சபைக்கு சொந்தமான பாதைகள், குடியிருப்புக் காணிகள் நீரில் மூழ்கும் எனவும் பெருந்தொகையாக வனம் அழிக்கப்படுவதால் யானை-மனித முரன்பாடு அதிகரிப்பதுடன் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக் காட்டப்பட்டது.

கடந்தகால அரசுகள் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டிற்காக உருவாக்கிய அதே திட்ட வரைபினை இந்த அரசாங்கமும் எதுவித கலந்துரையாடலோ மீளாய்வோ இன்றி நடைமுறைப்படுத்த முயல்வது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவிதமான நீர்த் தேவையுடன் மகாவலி எல் வலய பிரதேசத்திற்கு வெளியே வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மிக அதிக எண்ணிக்கையான விவசாயிகள் உள்ளார்கள். அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திட்டமொன்றினைப் பற்றிய சிந்தனை ஆட்சியாளர்களுக்கு ஏன் வரவில்லை எனவும் கேள்வியெழுப்பினார்.

2002ம் ஆண்டில் அரச அதிபராக இருந்த திரு.கணேஸ் அவர்களின் காலப்பகுதியில் வவுனியா வடக்கில் பெரிய மருதோடைக்குளம், சிற்றாற்றுக்குளம், கல்லாற்றுக்குளம் ஆகிய மூன்று குளங்களையும் பிரதானமாகக்கொண்ட 13 சிறிய நீர்ப்பாசனக் குளங்களை உள்ளடக்கிய படிமுறை நீர்ப்பாசன தொகுதியொன்றை புனரமைப்பதனூடாக 2000 ஏக்கர் வயல் நிலத்தில் செய்கை மேற்கொள்ள நியாப் மற்றும் சிரான் ஆகிய நிறுவனங்களுக்கு முன்மொழிவு சமர்ப்பித்தார், ஆனால் இன்றுவரை அத்திட்டம் கைகூடவில்லை.

மக்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்வதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் இந்த திட்டம் உட்பட பல இவ்வாறான திட்டங்களை அடையாளப்படுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் செயற்படுத்த உங்களுடன் சேர்ந்து செயற்பட நாம் தயாராகவே உள்ளோம், ஆனால் எமது ஒத்துழைப்பை பெறும் மனநிலை இதுவரை அரசாங்கத்திற்கு வராதது துரதிஸ்ரவசமானது என குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வன்னிப் பிரதேசத்தில் உள்ள வனவள திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட குளங்களையும் வயல்களையும் விடுவிப்பதுடன் அனைத்து குளங்களையும் புனரமைக்கும் போது பாரிய நீர்ப்பாசன திட்டங்கள் தேவையற்றது என்றும் காணியற்ற அனைவருக்கும் விவசாய காணிகளை வழங்க முடியும் எனவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அத்துடன் பாரிய நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வனத்தை அழிப்பதனூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் மனித-யானை மோதல் அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி தேவையான முன்மொழிவுகளை அனைவரதும் பங்குபற்றுதலுடன் தயாரிக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்தி அனைத்து மக்களையும் சமனாக மதிக்கும் அரசாக இத்திட்டத்தினை மீளாய்வு செய்து தமிழ் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர், இத்திட்டம் முன்னைய அரசுகளால் இனவாத நோக்கங்களுக்காவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை ஆமோதித்ததுடன், இத்திட்டம் மீளாய்வு செய்த பின்னரே நடைமுறைப் படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அத்துடன் இத்திட்டம் தொடர்பான தமிழ் தரப்பினது கரிசனைகள், முன்மொழிவுகளை தனக்கு எழுத்துமூலமாக சமர்ப்பிக்கும்படி கோரினார்.

மேலும், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின்போது வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட இடங்களின்கீழ்வரும் குளங்கள், வயற்காணிகளை விடுவித்தல் தொடர்பில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை எவையும் விடுவிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்தார். எனினும் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் மாவட்ட செயலகங்களிலிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டம் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள குளங்கள், வயல் நிலங்கள், அரச திணைக்களங்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகள் உள்ளிட்ட ஏனைய விவசாய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டமைன்றை எமது பகுதிகளில் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சரிடம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய கெளரவ ரவிகரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள்.

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் விரைவாக அவ்வாறான கூட்டத்தை கூடுவதாக வாக்குறுதியளித்தார்.

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை சித்திரைக்குள் விடுவிக்குமாறு கோரிக்கை..!

0

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளமையால், தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்துக்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றியமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில், அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையையடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியிருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு, மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபட்டுத் திரும்ப, இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில், அப்பாதையை நிரந்தர பாதையாக்கும் நோக்குடன் இராணுவத்தினர், பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததையடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள போதிலும், பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும், பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியேக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில், அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி, தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது, நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவித்து, ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சித்தரை புத்தாண்டு தினத்தன்று ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட ஏதுவாக பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

இன்றிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை..!

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று (17) நாடாளுமன்றத்தில் 152 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார,

இன்றைய தினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படவுள்ளது. இதன்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய கொடுப்பனவு இனி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரையில் ஓய்வூதியம் பெற்றுக் கொண்ட தொகைகள் மீள அறவீடு செய்யப்படும் என சிலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். எனினும் இதுவரையில் செலுத்தப்பட்ட தொகைகள் எதுவும் மீள அறவீடு செய்யப்படாது.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் ஓய்வூதியம் கிடையாது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கோடியே 44 லட்சம் ரூபாய் ஓய்வூதிய கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொள்வது நியாயம் இல்லை என்பதே தமது நிலைப்பாடு” என அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!