Sunday, April 5, 2026
Huis Blog

வடக்கின் சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அதிரடியாக நிறுத்தம்..!

0

வட மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு மாகாணக் கல்வித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பிறப்பித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வட மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக முன் வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து, கடந்த மார்ச் 30ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஏப்ரல் 2ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் ஆணைக்குழு ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் படி,
1. ஆட்சேபனைக்குரிய மற்றும் தற்போதைய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தும் **உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. குறித்த விடயம் தொடர்பான விசாரணை முடிவடைந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, மேலதிக புதிய இடமாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.

இந்த உத்தரவை அடுத்து, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஏற்கனவே வழங்கப்பட்ட இடமாற்ற அறிவுறுத்தல்களை நடைமுறைப் படுத்துவதைத் தவிர்க்குமாறும், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தடையுத்தரவு காரணமாக, வட மாகாணத்தில் நிலுவையிலுள்ள சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் கைகளை கட்டும் சட்டம்; பாடசாலை மோதலில் 15 வயது மாணவன் பலி..!

0

தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.

​லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.​

கடந்த மார்ச் 23ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டியின் இடைவேளையின் போது, தண்ணீர் குடிக்கச் சென்ற இடத்தில் 11ஆம் தர மாணவனுக்கும், 10ஆம் தர மாணவனுக்கும் இடையே சிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இது பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், ஆசிரியர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.​பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவன், கடும் வாந்தி மற்றும் தலைவலியால் துடித்துள்ளார்.

பெற்றோர் கேட்ட போது, “விளையாடும் போது தவறி விழுந்து விட்டேன்” என்று கூறி உண்மையை மறைத்துள்ளார்.​

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனைப் பரிசோதித்த போது மாணவனின் மூளையினுள் பலத்த இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டும், அந்த உயிர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரிந்தது.​

தாக்குதல் நடத்திய 16 வயது மாணவன் மத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மாணவன் உயிரிழந்துள்ளதால், இந்த வழக்கு மிகத் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை சட்டதங்களின் மூலம் அதிபர், ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வைத்தியர்களின் போராட்டம் அடிப்படையற்றது; முரண்பாடு இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள்..!

0

“பயிற்சியை நிறைவு செய்த வைத்தியர்களுக்கான நியமன முறையை எதிர்த்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது” என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நியாயமான காரணங்களுக்காக வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டால் அது குறித்துப் பேச்சு நடத்த முடியும். ஆனால், தற்போது முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டமானது தேவையற்றது.

அமைச்சின் கொள்கைகளுடன் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், அப்பாவி நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்காமல் அதனை நீதிமன்றம் ஊடாகத் தீர்த்துக் கொள்ளுமாறு வைத்திய சங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

வைத்தியர்கள் அரச சேவையில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம் இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்தக் கால அவகாசம் எக்காரணம் கொண்டும் மேலும் நீடிக்கப்பட மாட்டாது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறிய வைத்தியர்களுக்கு, அரச வைத்திய சாலைகளில் பணியாற்றும் வாய்ப்போ அல்லது அதற்கான ஊதியமோ வழங்கப்பட மாட்டாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் வைத்தியர்களின் தொடர் பணிப் புறக்கணிப்பு காரணமாக, சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அரச வைத்திய சாலைகளுக்குச் சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒலுமடுவில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க சத்தியலிங்கம் எம்பி 1.2 மில்லியன் ஒதுக்கீடு..!

0

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியில் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 1.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா சுசீலன் அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் குறித்த பகுதியை சேர்ந்த விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு குறித்த நிதியொதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

இதற்கான அனுமதி கடிதம் நேற்று (02.04.2026) ஒலுமடு கமக்காரர் அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, பிரதேசசபை உறுப்பினர் செ.சுசீலன், பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளர் தவேந்திரராசா (அமலன்) உள்ளிட்டோர் குறித்த அனுமதி கடிதத்தினை அமைப்பினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

0

கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 22 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது.

அத்துடன் லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக உள்ளது.

வரண்ட வானிலை காரணமாக மேல் மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் 2.5 மில்லியன் கனமீட்டர் நீரில், 1.25 மில்லியன் கனமீட்டர் மேல் மாகாணத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

கலாட்டுவாவ நீர்த் தேக்கத்தில் நீர்மட்டம் குறைவினால் இங்கு 15,000 கனமீட்டர் நீர் உற்பத்தி குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் பண்டிகைக் காலம் என்பதால் நீரின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும், எனவே நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளச் சீரமைப்புப் பணிகள்; நேரில் சென்ற ரவிகரன் எம்.பி..!

0

முல்லைத்தீவு – குமுழமுனை கமநலசேவை நிலையப் பிரிவிலுள்ள ஆண்டான்குளம் பகுதியில் அமைந்துள்ள நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதிக்குரிய கமக்கார அமைப்புப் பிரதிநிதிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி கமக்கார அமைப்பு பிரதிநிதிகளின் அழைப்பையேற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 02.04.2026 நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான 1500 ஏக்கர் வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத் திணைக்களம் ஆக்கிரமிப்புச் செய்திருந்தது.

இத்தகைய சூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல் நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் அப்பகுதி விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025ஆம் ஆண்டு நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, குளத்தின் சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் எதிர்வரும் 15.07.2026ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்படும் என்ற ஒப்பந்தத்துடன் தொடங்கப்பட்ட நித்தகைக் குளத்தின் சீரமைப்பு வேலைகள் தற்போது மந்தகதியில் இடம்பெற்று வருவதுடன், வினைத்திறனற்ற வகையில் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டப்பட்டது. அத்தோடு சீரமைப்புப் பணிகளின் நிலைமைகளையும் விவசாயிகள் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேரடியாகக் காண்பித்தனர்.

குறிப்பாக 02கிலோமீற்றருக்கும் மேலான தூரமுடைய குளக்கடில் தற்போது 150 மீற்றர் வரையிலேயே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இதன் போது தெரிவித்த விவசாயிகள், ஒப்பந்தக் காலத்திற்குள் சீரமைப்பு வேலைகள் முடிவுறுத்தப்படாதெனவும் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு குளக்கட்டுச் சீரமைப்பிற்கு பயன்படுத்தப்படும் மண் தூய்மைப் படுத்தப்படாமல், மரவேர்களுடன் பயன்படுத்தப்படுவதாகவும், முறையற்ற விதத்தில் சீரமைப்பு வேலைகள் செய்யப்படுவதாகவும், ஒப்பந்ததாரரிடம் போதுமான இயந்திர வசதிகள் இல்லையெனவும், வினைத்திறனற்ற வகையில் சீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் மந்தகதியிலும் வினைத்திறனற்ற வகையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள சீரமைப்புப்பணிளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சீரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இவ்வாறு மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் தொடர்பில் உரிய திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.

மேலும் குறித்த சீரமைப்புப் பணிகளை துரிதகதியிலும், வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கு தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது.

யாழில் மணல் கடத்தல் கும்பலின் தாக்குதலில் காவல்துறை அதிகாரி பலி; இருவர் கைது..!

0

யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன் மற்றுமொரு காவல் உத்தியோகஸ்தருக்குப் படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கொடிகாமம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர்.

இந்தநிலையில், காவல்துறையினரைக் கண்டதும் உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து, காவல்துறையினர் இருவர் மீதும் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது உழவு இயந்திரம் மோதியதில், கொடிகாமம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தெரிவு…!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியின் தெரிவுக்கூட்டம் இன்று (29.03.2026) கட்சியின் வவுனியா மாவட்டத்தின் உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புதிய நிர்வாகத்தின் தலைவராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களும், செயலாளராக வெங்கலச் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் யோகேஸ்வரன் சனோஜன் அவர்களும் பொருளாளராக மருத்துவர் ஞானசிங்கம் நிரோசன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், உபதலைவர், உபசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகசபை உறுப்பினர்களும் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த தெரிவுக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் கிளையின் செயலாளர் நடராசா கருணாநிதி, பொருளாளர் சி.சந்திரசேகரம், மாவட்டக் கிளை உறுப்பினர் மயூரதன், பாபு ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை; மேலும் பாரியளவில் சரியும் சாத்தியம்..!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும்.

இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.

400 பாடசாலைகளுக்கு கிடைக்கும் வசதி; கல்வி அமைச்சரின் முன்மொழிவிற்கு அனுமதி..!

0

விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையும், போதுமான வசதிகள் இல்லாததும் விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப் படுத்துவதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறமை மிக்க விளையாட்டு வீரர்களைக் கண்டறிவதையும் தடுக்கின்றன என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தற்போது, ​​நாட்டின் 10,096 அரசாங்கப் பாடசாலைகளில் சுமார் 5% பாடசாலைகளில் மட்டுமே தரமான அளவிலான விளையாட்டு மைதானங்கள் உள்ளன.

இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் 400 மீட்டர் ஓடுதளத்துடன் கூடிய குறைந்தபட்சம் ஒரு தரமான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், 25 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தேசியப் பள்ளி மற்றும் மூன்று மாகாணப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 400 பள்ளிகள் உள்ளடக்கப்படும். இந்த முன்னெடுப்பு 2026-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டுக்குள் ரூ. 2,010.50 மில்லியன் மதிப்பீட்டில் செயற்படுத்தப்படும்.

கல்வி அமைச்சர் என்ற தகுதியில் பிரதமர் ஹரினி அமரசூரியவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

error: Content is protected !!