வட மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு மாகாணக் கல்வித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பிறப்பித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வட மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக முன் வைக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து, கடந்த மார்ச் 30ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், ஏப்ரல் 2ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் ஆணைக்குழு ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் படி,
1. ஆட்சேபனைக்குரிய மற்றும் தற்போதைய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தும் **உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
2. குறித்த விடயம் தொடர்பான விசாரணை முடிவடைந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை, மேலதிக புதிய இடமாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது.
இந்த உத்தரவை அடுத்து, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ஏற்கனவே வழங்கப்பட்ட இடமாற்ற அறிவுறுத்தல்களை நடைமுறைப் படுத்துவதைத் தவிர்க்குமாறும், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தத் தடையுத்தரவு காரணமாக, வட மாகாணத்தில் நிலுவையிலுள்ள சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றங்கள் அனைத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.













