Tuesday, March 24, 2026
Huis Blog

ஒரே வாரத்தில் 38,000 ரூபா சரிந்த தங்க விலை; மேலும் பாரியளவில் சரியும் சாத்தியம்..!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 38,000 ரூபா வீழ்ச்சியாகும்.

இதன்படி, கடந்த வாரம் 17ஆம் திகதி 408,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று (24) 370,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, கடந்த வாரம் 17ஆம் திகதி 375,300 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 340,400 ரூபாவாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையிலும் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,344 டொலர்களாகக் பதிவாகியுள்ளது.

400 பாடசாலைகளுக்கு கிடைக்கும் வசதி; கல்வி அமைச்சரின் முன்மொழிவிற்கு அனுமதி..!

0

விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையும், போதுமான வசதிகள் இல்லாததும் விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாட்டைக் கட்டுப் படுத்துவதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறமை மிக்க விளையாட்டு வீரர்களைக் கண்டறிவதையும் தடுக்கின்றன என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தற்போது, ​​நாட்டின் 10,096 அரசாங்கப் பாடசாலைகளில் சுமார் 5% பாடசாலைகளில் மட்டுமே தரமான அளவிலான விளையாட்டு மைதானங்கள் உள்ளன.

இந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதற்காக, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் 400 மீட்டர் ஓடுதளத்துடன் கூடிய குறைந்தபட்சம் ஒரு தரமான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், 25 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தேசியப் பள்ளி மற்றும் மூன்று மாகாணப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

இதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 400 பள்ளிகள் உள்ளடக்கப்படும். இந்த முன்னெடுப்பு 2026-ஆம் ஆண்டு முதல் 2029-ஆம் ஆண்டுக்குள் ரூ. 2,010.50 மில்லியன் மதிப்பீட்டில் செயற்படுத்தப்படும்.

கல்வி அமைச்சர் என்ற தகுதியில் பிரதமர் ஹரினி அமரசூரியவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஏர் பஸ் ஊழல் விவகாரம்; பிடியாணை பிறப்பிப்பது தொடர்பில் ஏப்ரல் 02 இல் நீதிமன்ற தீர்மானம்..!

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி மற்றும் முன்னாள் குழும உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோர் குற்றச்சாட்டில் சந்தேக நபராக பெயரிடப்பட்டவர்கள் மீது பிடியாணை உத்தவை பிறப்பிப்பதா என்பதைப் பற்றிய தீர்மானத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாகத் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை..!

0

எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையாளர்களின் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றுநிரூபத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக முறைகேடுகளை அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்..!

0

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று (18) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பான முறைகேடுகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

தொலைபேசி இலக்கங்கள்: 0112106767 / 0117296130

பைபிள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வடக்கின் ஆளுநர்..!

0

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற் கொண்டு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் அவர்களுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக் காட்டப்பட்டது.

குறித்த அமைப்பு கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்து கொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவு படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார்.

மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோக பூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

2025 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவதற்கான தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கா.பொ.த சாதாரண பரீட்சை தாள்கள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் சாதாரண பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, செய்முறைத் பரீட்சைகள் முடிந்தவுடன் சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர் முறை அவசியம் – ஜெகதீஸ்வரன் எம்.பி

0

தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், தற்காலிகத் தட்டுப்பாடுகள் உருவாவதை தடுக்கவும் கியூ ஆர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாரிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

இதன் தாக்கத்தினால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகள் கூட இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் தவிர்த்துக் கொண்டுள்ளார்கள்.

இலங்கையில் நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எரிபொருள் நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோட்டா +கியூ ஆர்) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறையின் மூலம் எரிபொருள் விநியோகம் தற்போது சீரான முறையில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதையும், தற்காலிகத் தட்டுப்பாடுகள் உருவாவதை தடுக்கவும் இந்த முறை பெரிதும் உதவுகிறது.

கியூ ஆர் முறைமையில் பதிவு செய்யும் போது பொதுமக்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

புதிதாகப் பதிவு செய்பவர்களுக்கு இது இலகுவாக இருந்தாலும், வாகனங்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் உரிமையாளர்கள் பழைய பதிவுகளை நீக்கிவிட்டுப் புதிதாகப் பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய டிஜிட்டல் அமைச்சகம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. அடுத்த ஓரிரு நாட்களில் இந்தச் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டு, அனைவரும் தடையின்றிப் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக இலங்கைக்கு ஒரு நாளைக்கு 6,000 மெற்றிக் தொன் எரிபொருள் தேவைப்படுகிறது. இருப்பினும், கடந்த சில வாரங்களில் நிலவிய அச்சம் காரணமாக மக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்ததால், தினசரி நுகர்வு 10,000 மெட்ரிக் தொன் ஆக உயர்ந்துள்ளது.

தற்போதுள்ள கையிருப்பை வைத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை விநியோகத்தைத் தொடர முடியும் என அரசு கணித்துள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்யத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு கிபூஆர் நடைமுறை இன்றி எரிபொருள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீனவர்களுக்கும் தடையின்றி எரிபொருள் கிடைக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த உலகளாவிய நெருக்கடியை எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். எனினும், இது ஒரு சர்வதேசப் பிரச்சினை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள்.

ஆனால் போலிப் பிரச்சாரம் மூலம் எதிர்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயல்கிறார்கள். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

விசேட விடுமுறை தினமான புதனில் மேலதிக வகுப்புகளுக்கு முழுமையாகத் தடை..!

0

விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதனை மீறிச் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

பெரியகோமரசங்குளம் மா.வி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட வைத்தியர் சத்தியலிங்கம்..!

0

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகோமரசங்குளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு இன்று (16.03.2026) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.போல் அமல்ராஜ், வவுனியா தெற்கு வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.வி.விமலன் உள்ளிட்ட அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் அணிநடைவகுப்பு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

error: Content is protected !!