துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில், துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பேருந்து புறப்படும் நேரங்கள்:
* காலை 6.00 மணி – துணுக்காய் * காலை 6.10 மணி – மல்லாவி * காலை 7.00 மணி – மாங்குளம் * காலை 7.10 மணி – மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்
மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வாக இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை, துணுக்காய் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.
காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ,
ஒரு வருடத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோன்றே , காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டு வருடங்களாக , காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதியை தமிழ் கட்சிகள் சந்தித்த போதும் , காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமாக கூறியிருந்தோம். குறிப்பாக வடக்கு – கிழக்கில் முப்படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் , மலையக மக்களுக்கு காணி பகிர்ந்தளித்து தொடர்பிலும் பேசினோம்
யாழ்ப்பாணத்தில், பலாலி, மயிலிட்டி, தையிட்டி போன்ற பிரதேச மக்களும் முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடி வருகின்றனர். அது மாத்திரமின்றி , மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதார நிலங்களை மீட்கத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்து கூறினோம்.
அதற்கு அவர்கள் முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளனர்.
மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தில் மாற்றமில்லை என அரசாங்கம் கூறி வந்தாலும் , இரண்டு வருடங்களாக இதையே கூறி வருகின்றனர் இது ஏற்புடையதில்லை
யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அளவுக்கு காணி விடுவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக மக்கள் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
நாங்களும் போராட்ட களத்தில் நின்றவர்கள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , மக்களின் போராட்டங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காது இருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் இனவாதிகள் அல்ல மதவாதிகள் இல்லை என அரசாங்கம் கூறிக்கொண்டாலும் , செயலில் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும் என தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (10) காலை கைது செய்யப்பட்டார்.
காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு இன்று வருகை தந்தார். இதன் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியான ஒரு விசேட அபிவிருத்தி நிதியத்தை தாபிக்க வேண்டும் என்கின்ற கெளரவ பாராழுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பிரேரணையினை தாம் வரவேற்று வழிமொழிவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இன்று (07.08.2026) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கொண்டுவரப்பட்ட பிராந்திய அபிவிருத்திக்காக புதிய நிதியங்களை உருவாக்க கோரல் தொடர்பிலான பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த விடயம் மிகவும் முக்கியமானது. கடந்த காலத்தில் , மாகாண சபையில் இதேபோன்ற ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்தபோது, அன்றைய அரசாங்கம், மாகாண சபைக்கு அவ்வாறானதொரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் இல்லை என்ற கட்டுப்பாட்டை விதித்தது.
அப்போது, அதனை முதலமைச்சர் நிதியமாக மாகாண சபையின் ஊடாகக் கொண்டு வருவதற்கும் நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், அந்த முயற்சியும் இறுதிவரை இழுத்தடிக்கப்பட்டு, அந்த முதலமைச்சர் நிதியம் முடக்கப்பட்டது.
ஆகவே, கெளரவ சாணக்கியன் அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்த விசேட அபிவிருத்தி நிதியம், முழு நாட்டிற்கும் அல்லாவிட்டாலும், அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான ஒரு நிதியத்தை உருவாக்குவது என்ற வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உங்களுக்கு தெரியும், கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.
யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், எமது மாகாணங்களான வடக்கு, கிழக்கு மட்டுமன்றி மொனராகலை, நுவரெலியா போன்ற பகுதிகளிலும் கூட அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க பின்னடைவு தொடர்கிறது.
இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) எடுத்துப் பார்த்தால், வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு சுமார் 4 வீதமாகவே உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் GDP பங்களிப்பை ஒன்றாக எடுத்துப் பார்த்தாலும், அது கிட்டத்தட்ட 9 வீதமாகத்தான் காணப்படுகிறது.
ஆனால், தென்பகுதியில் மாகாணமொன்றின் பங்களிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன. எனவே, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தி, அவற்றின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான நிதியமைப்புகள் அவசியமாகின்றன.
அந்த வகையில், கெளரவ சாணக்கியன் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி நிதியம், பிராந்தியங்களுக்கு இடையிலான அபிவிருத்தி இடைவெளியை குறைப்பதற்கும், பின்தங்கியுள்ள பகுதிகளுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான முயற்சியாக அமையும்.
, அந்த நிதியத்தின் மூலமாக அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களையும் மாகாணங்களையும் ஏனைய மாகாணங்களுக்கு சமமான நிலைக்கு கொண்டுவருவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படும்.
அந்த வகையில், எமது மாகாணங்களை எடுத்துப் பார்க்கும்போது, யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அழிவடைந்த பல தொழிற்சாலைகள் இன்றுவரை மீள இயங்காத நிலை காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து பதினேழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையிலும் கூட, அழிவடைந்த அந்தத் தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
ஆகவே, எமது பிரதேசங்கள், குறிப்பாக ஏற்கனவே அவர் தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ள பிரதேசங்கள், அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.
இந்த நிலையில், முன்வைக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி நிதியமும், அவருடைய பிரேரணையும், இந்த நாட்டின் அனைத்து மக்களும் சமமான அபிவிருத்தி வாய்ப்புகளுடன் சமத்துவமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியமானதாகும் என நான் கருதுகின்றேன்.
எனவே, இந்தப் பிரேரணையை நான் முழுமையாக வரவேற்று, ஆதரித்து, வழிமொழிகின்றேன் என தெரிவித்தார்.
கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப் பெரிய உதவியாகும் என்றும், ‘எங்களால் எதுவும் முடியாது என்றில்லை, முயன்றால் எதுவும் முடியும்’ என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவசக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டத்தரணி வே.தேவசேனாதிபதி அவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கருத்தரங்கிற்கு பிரபல வர்த்தகர் நாகரத்தினம் அவர்கள் அனுசரணை வழங்கி வருகின்றார்.
மாணவர்களை நோக்கி உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் ஒவ்வொரு மாணவரின் அர்ப்பணிப்புடனும் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். ‘இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் என்றும், ஒவ்வொரு மாணவரின் வெற்றியும் அவரது தனிப்பட்ட வெற்றியை மட்டுமன்றி வடக்கு மாகாணத்தின் பெருமையையும் உயர்த்தும் என்றும் தெரிவித்தார்.
பதினாறு வயது வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை என்பதால், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, தவறான பழக்கவழக்கங்களிலிருந்தும், நேரத்தை வீணடிக்கும் செயல்களிலிருந்தும் விலகி, கல்வியில் முழு கவனத்தையும் செலுத்துமாறு அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். சமூக ஊடகங்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு மற்றும் காலவிரயம் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் நேரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அரசாங்கமும் வடக்கு மாகாண நிர்வாகமும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பாடசாலைகள், ஆசிரியர்கள், நூல்கள் மற்றும் கல்வி வசதிகள் அனைத்தும் மாணவர்களின் வெற்றிக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன என்றார். அதேவேளை, மாணவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவர்களே என்பதையும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், கல்விக்கான உதவியே மனித வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய முதலீடு எனக் குறிப்பிட்டார். அதற்காக மாணவர்களுக்காக இலவசக் கருத்தரங்கை ஏற்பாடு செய்து, அதற்கு அனுசரணை வழங்கிய ஏற்பாட்டாளர்களின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டிய அவர், இத்தகைய முயற்சிகள் வடக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு வலுவான பங்களிப்பை வழங்கும் என்றார்.
மேலும், பெற்றோரின் தியாகங்களையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் மதித்து, கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் அவர்களின் உழைப்புக்கு மாணவர்கள் சிறந்த கைமாறு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதிக மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமன்றி, நேர்மை, ஒழுக்கம், பொறுப்பு மற்றும் மனிதநேயப் பண்புகளுடன் சிறந்த குடிமக்களாக உருவாகுவதும் கல்வியின் உண்மையான நோக்கமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இன்றைய மாணவர்களே நாளைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், நிர்வாகிகள் மற்றும் நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் என்றும் குறிப்பிட்ட ஆளுநர், பெரிய கனவுகளைக் காணவும், அந்தக் கனவுகளை நனவாக்கும் வகையில் விடாமுயற்சியுடன் உழைக்கவும் மாணவர்களை ஊக்குவித்தார்.
முயற்சி செய்பவர்களை யாராலும் தடுக்க முடியாது என்றும், இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதப்போவது இன்றைய மாணவர்களே என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சத்தியசீலன், சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி, அனுசரணையாளர் நாகரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது குறித்த மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அப்பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு நீண்டகால உத்தி அவசியமாகின்றது எனவும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த மூன்று மாகாணங்களிலும் நடைபெற்று வரும் பாடசாலைக் கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.
இதன்போது, மனிதவள முகாமைத்துவம் மற்றும் உயர் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் குழுக்கள் உட்பட, தனது மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்ட உட் குழுக்களின் முன்னேற்றத்தையும் பிரதமர் ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாநகர சபையின் முதல்வரைப் பதவி நீக்கம் செய்து வட மாகாண ஆளுநர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடைக்கட்டளையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் பதவி நீக்க உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, மனுதாரர் தரப்பில் பெறப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் மனுதாரர் தரப்பினால் நேற்றைய தினம் மறுஆட்சேபனைத் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய நாள் முழுவதும் இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பிலேயே விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.
இது குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
“நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைவாக, இரு தரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணங்களாக வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னரோ நீதிமன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்யவுள்ளோம்.”
“தாக்கல் செய்யப்படும் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், இடைக்காலத் தடை தொடர்பான இறுதி உத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 9 ஆம் திகதி அறிவிக்கும்.”
“அதன் பின்னரே பிரதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக் காலத் தடைக் கட்டளை அமுலில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை ஊடக உயர்தொழிளர்களின் பட்டயம் பெற்ற நிறுவக சட்டமூலத்துக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் உறுப்பினர்களான உதய களுபத்திரண மற்றும் சுனில் ஜெயசேகர ஆகியோர் சட்டத்தரணி லக்ஷான் டயஸ் ஊடாக இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில் சட்டமா அதிபர், ஊடகத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இம்மனுவை வெள்ளிக்கிழமை (7) பரிசீலித்த உயர் நீதிமன்றம், எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் இது தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, முன்மொழியப்பட்டுள்ள கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமையான பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பன கட்டுப்படுத்தப்படும் என மனுதாரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அத்துடன், இச்சட்டமூலத்தின் சில வரையறைகள் மற்றும் விளக்கங்கள் மூலம் சாதாரண பிரஜைகள் மற்றும் ஒன்லைன் கிரியேட்டர் உரிமைகளும் முடக்கப்படலாம் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அரச வேலைத் திட்டத்தின் விருப்பத்திற்கமையவே இதன் இடைக்காலக் குழு நியமிக்கப்படுவதால், கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒரு கட்டமைப்பே உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, திருத்தங்களின்றி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்து பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன இதன் போது பதிலளிக்கையில்,
மிகை ஊழியர் அதிபர்களைப் பொறுத்தவரையில் வடமாகாணத்தில் தேசிய பாடசாலையில் ஒருவரும், மாகாண பாடசாலைகளில் 52பேருமாக மொத்தம் 53மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
அதேவேளை தீவளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் 06பேரும், மாகாணப் பாடசாலைகளில் 631பேருமாக மொத்தம் 637 மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
கடந்த 2012.08.08ஆம் திகதி முதல் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிருக்கின்ற அதிபர்களின் நியமனக் கடிதங்களுக்கு அமைவாக, அவர்களுக்கு அதிபர்களுக்கான சம்பளத்தினை மாத்திரமே பெற்றுக்கொள்ள வாய்பிருக்கின்றது.
நிர்வாக கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள் அவர்களுக்கில்லை. எனவே மிகை ஊழியர் அதிபர்களுக்கு ஏதேனுமொரு வகையில் நிவாரணங்களை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சினால் ஆராயப்பட்டது.
எனினும் ஆட்சேர்ப்பின் அடிப்படையிலும், நிதிப் பிரமாணங்களுக்கு அமைவாகவும், சுற்றறிக்கைகளின் அடிப்படையிலும் மிகை ஊழியர் அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை. அதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
ஆனாலும் நாம் தற்போது மிகை ஊழியர் அதிபர்களுடன் கலந்துரையாடி யிருக்கின்றோம். உத்தியோகத்தர்கள் மட்டத்திலும் கலந்துரையாடியிருக்கின்றோம். அத்தோடு அரசசேவைகள் ஆணைக்குழுவிடமும் இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.
உண்மையில் மிகை ஊழியர் நியமன அதிபர்கள் கணிசமான பணிகளை ஆற்றுகின்றனர். அனைத்து விடயங்களும் எம்மால் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை அதிபர்களை இடமாற்றும் போது மாகாண மட்டத்தில் சில பிரமாணங்கள் இருக்கின்றன. சில பாடசாலைகளில் 15 தொடக்கம் 20ஆண்டுகளாக அதிபர்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
உரியமுறையில் அதிபர்களை கோராத வரையில் அதிபர் வெற்றிடம் பூர்த்தி செய்யப்படுவதுமில்லை.
அரச சேவைகள் ஆணைக்குழுவுடன் எதிர்வரும் 11ஆம்திகதி பேச இருக்கின்றோம். அதிபர் நியமனங்களைக் கோராத பாடசாலைகளுக்கு எவ்வாறு அதிபர்களை நியமிப்பது என்பது பற்றி பேசவிருக்கின்றோம் – என்றார்.
மிகை ஊழியர் அதிபர்கள்மீதான புறக்கணிப்பென்பது “நவீன தீண்டாமை” என கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு மிகை ஊழியர் நியமன அதிபர்களுக்கு நிர்வாகக் கொடுப்பனவு வழங்கப்படாமை மற்றும் அவர்களுக்கு இடமாற்றம் பெறுவதிலுள்ள சிக்கல் நிலமைகள் குறித்தும் இதன்போது பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் 07.08.2026இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே இந்த மிகை ஊழியர் அதிபர்களுக்கு நியாயமான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
மிகைஊழியர் அதிபர் விடயத்தில் ஓர் அரசாக தங்களின் நிலைப்பாடு பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதாகத்தான் அமையவேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.
அவர்கள் இப்பொழுதும் இடர்படுகின்ற இரண்டு பிரச்சினைகளுள் ஒன்று அவர்களுக்குரிய நிருவாகக் கொடுப்பனவு கிடைக்கப் பெறாமை தொடர்பானது.
அவர்களும் ஏனைய அதிபர்களைப் போல நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் என பெரும் ஆளணிக்கு தலைமை வகிக்கின்றார்கள். இருந்தபோதும், ஏனைய அதிபர்கள் பெறும் நிருவாகக் கொடுப்பனவு அவர்களுக்கு இதுவரை வழங்கப்படாதுள்ளது.
இப்பொழுது சில ஆண்டுகளாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் கோரப்படும் அதிபர் விண்ணப்பங்களில் மிகை ஊழியர் தவிர்ந்த அதிபர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
விண்ணப்பிப்பதிலும் புறக்கணிப்பு, கல்விச் சூழமைவில் இது ஒரு நவீன தீண்டமையாகவே பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாயமா என பிரதி அமைச்சரிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
எனவே தயவுசெய்து பிரதிஅமைச்சர் இவ்விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
தயவுசெய்து இந்த விடயத்தில் புறக்கணிப்புக்களைச் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ள விடும்புகின்றேன்.
வடக்கு மாகாணத்தில் ஒரு தொகுதி அதிபர்கள் ஒருவிதமாகவும், ஏனைய அதிபர்கள் வேறுவிதமாகவும் நடாத்தப்படுகின்றனர். இவ்வாறான புறக்கணிப்புக்களைச் செய்ய வேண்டாம் என்றுதான் நான் கேட்டுக் கொள்கின்றேன் – என்றார்